தமிழீழ விடுதலை புலிகள் பயிற்சி முகாம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினார் என கூறப்படும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கிளிநொச்சி – பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
சந்தேகநபரால் பரப்பப்பட்ட அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர் இன்று கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
