அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பரோன் டிரம்பை இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள வீடியோ சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தத் தொகுப்பில், பரோன் ட்ரம்பைக் கண்காணிப்பது போன்ற அனிமேஷன் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அவரை நெருங்குவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகள் விவரிக்கப்பட்டு, அவரைப் பற்றியத் தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் பரோன் ட்ரம்ப் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமெரிக்கச் சீக்ரெட் சேவிஸ் (Secret Service) பாதுகாப்பு வளையங்களை ஊடுருவுவது போன்ற கிராபிக்ஸ் சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நேரடியாகவே இலக்கு வைத்து ஈரான் அரசு ஊடகம் இத்தகைய பகிரங்க மிரட்டலை விடுத்திருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகள் ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகளுக்கு எதிராகப் பல்வேறு மிரட்டல்களை விடுத்து வந்த சூழலில், தற்போது டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு ஈரான் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்து வந்தது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த அச்சுறுத்தல் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன .
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் சார்ந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
