இந்தியாவின் மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 வயது சிறுவன் சிக்கி உயிரிழந்தான். மேலும் நால்வர் காயமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கோலாசிப் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,
மிசோரம்-அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வைரேங்டே நகரில் அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
நிலச்சரிவில் சிக்கி சோடிங்லியானா என்று அடையாளம் காணப்பட்ட,14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவனது உடல் காவல்துறையினராலும் உள்ளூர் தன்னார்வலர்களாலும் மீட்கப்பட்டது.
காயமடைந்த இருவர் அஸ்ஸாமின் சில்சார் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற இருவர் வைரேங்டே சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலச்சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று குடும்பங்கள் இந்த வீடுகளில் வசித்து வந்தனர் என்று அவர் கூறினார்
