Colombo(News 1st) பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை இலங்கை மின்சார சபை முன்வைக்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை ஆராய்ந்த போதே இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நேற்று(16) அறிவித்திருந்தது.
குறித்த பிரேரணை தொடர்பில் உரிய மீளாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தேவையான மேலதிக தரவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபையிடம் கோரியுள்ளதாகவும் மின்சார சபையின் பிரேரணைக்கான அனுமதியை எதிர்வரும் 3 நாட்களுக்குள் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.