Colombo (News 1st) ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கும், இலத்திரனியல் ஊடக உரிமங்களை இரத்து செய்யும் சட்டமூலத்தை முன்வைத்துள்ள அதேவேளை, ஊடகங்களை நசுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களிலேயே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும் ஊடக வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில், ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நேற்று (12) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் நீட்டிப்பாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட நடைமுறைகள் சட்டம், பொதுத்தேர்தல் சட்டம், மாகாண சபை தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச்சட்டம் ஆகியவற்றை தனித்தனியே திருத்துவதற்கு பதிலாக உத்தேச புதிய சட்டமூலத்தை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2015 மார்ச் மாதத்தில் நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்த போது, தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக வழிகாட்டல்களை மீறினால் ஊடகவியலாளர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை உள்ளடக்க முயற்சிக்கப்பட்டது.
எனினும், அதன் 26 ஆவது சரத்தை நிறைவேற்ற வேண்டுமாயின், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த சட்டங்களை வேறு வழியில் கொண்டு வர அரசாங்கம் இப்போது மீண்டும் முயற்சிக்கிறதா?
ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்திற்கு தற்போது பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், ஊடக அடக்குமுறை சட்டங்களை வேறொரு வகையில் நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா ?