Colombo (News 1st) எல்கடுவ சம்பவத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குடியிருப்பை உடைத்து அகற்றிய அதிகாரி கைது செய்யப்படாமை தொடர்பாக சபையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.
மாத்தளை – எல்கடுவ, ரத்வத்த தோட்டத்தில் தொழிலாளி ஒருவரின் தற்காலிக வீட்டை அப்புறப்படுத்த தோட்ட நிர்வாகம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு சென்றிருந்ததுடன், வீட்டை அகற்றிய தோட்ட நிர்வாக அதிகாரியுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இதனிடையே, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தோட்டத்தொழிலாளிகள் எதிர்கொண்டுள்ள இவ்வாறான சம்பவங்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் இன்று விவாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) தோட்டப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மக்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில், மக்கள் பிரதிநிதி ஒருவர் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
எவரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அவ்வாறான சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கினால் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிக்கை மூலம் கூறியுள்ளார்.