அரச நிதியை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தியமைக்கான ஆதாரம் இருந்தால் தான் உடனடியாக பதவி விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நேற்று (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் பேசிய மஹிந்தானந்த, சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்ததாக நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும், கணக்காய்வு அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதேவேளை கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு வெளியே 1,300 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் அரச நிதியை தனது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ அல்லது கட்சிக்காகவோ தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் தான் பதவி விலக தயார் என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.