பெலியத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (14) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்படி, சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க தங்காலை பிரதான நீதவான் ஹேமந்த புஷ்பகுமார உத்தரவிட்டார்.
ஜனவரி 22 ஆம் திகதி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் வாகனத்தில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியது. காலை 8:30 மணிமுதல் 8:40 மணிவரை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
டிஃபென்டரில் இருந்த மற்றைய நபர் படுகாயங்களுடன் தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இறந்தவர்களில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவார்.