Colombo (News 1st) மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு முன்னைய தரவுகளை தமக்கு சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் செப்டம்பர் 4 மற்றும் 26 ஆம் திகதிகளில் தமக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நாளாந்த மின் தேவை 44.7 ஜிகாவாட் என கணிக்கப்பட்டுள்ள போதிலும், நாளாந்த மின் தேவை 41.01 ஜிகாவாட் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நீர் மின் உற்பத்தித் திறனும் மின்சார சபையினால் குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நிலக்கரி மின் உற்பத்தி தொடர்பாக மின்சார சபையின் கணிப்பு முரணாக அமைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கோரப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment.