Sangathy
News

இருளகற்றி ஔியேற்றும் தீபாவளி பண்டிகை இன்று(12)

Colombo (News 1st) உலக வாழ் இந்துக்கள் இன்று(12) தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

நரகாசுரனை வதம் செய்து அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான ஒளியை உள்ளங்களிலும் இல்லங்களிலும் கமழச் செய்யும் இந்துக்களின் தீபத்திருநாள் இன்றாகும்.

உலகலாவிய ரீதியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு என்ற வகையில் கடந்த 2 வருடங்களில் எதிர்கொண்ட இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஔி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த தருணத்தில், நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டுமனவும் பிரார்த்திக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி இலங்கையை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்வதற்கும் பல்லின மக்களிடையே சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி வரப்பிரசாதமாக அமைய வேண்டுமென ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உலகிலும் தீமை எனும் அந்தகாரத்தை அகற்றி நன்மை எனும் ஒளியைப் பரவச்செய்யும் உயர்ந்த நோக்குடன் உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தீபங்களை ஏற்றி தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“ஆன்மீக இருளுக்கு எதிராக ஞான ஒளியையும் தீமைக்கு எதிராக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும்” வெற்றிகொள்வதை குறிக்கும் தீபத் திருநாள் தீபாவளியை அர்த்தப்படுத்தும் வகையில், அனைவருக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான பிரார்த்தனையுடன் பொது ஆன்மீக வெற்றிகளுக்காக இந்த நன்னாளில் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிபூணுவோம் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றுமை மற்றும் உண்மையின் பண்புகளை புதிய பரிமாணத்திற்கு உயர்த்தி இந்த தீபாவளி திருநாளில் நாம் பெறும் ஒளியின் மூலம் ஒருவருக்கொருவர் மற்றும் நீதிக்காக ஒரு சிறந்த எதிர்காலத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபங்கள் விளங்கட்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூலை மாதத்திற்குள் மின்சார கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும்: கஞ்சன விஜேசேகர

Lincoln

PMD claims President’s response misinterpreted

Lincoln

மீனவர் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy