காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும் : இஸ்ரேல்..!

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறும்போது, ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

ஹமாசின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் சண்டை குறைந்தது இந்த ஆண்டு முழுவதும் தொடரும். பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. காசாவின் ரபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அதையும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம் என்றார்.

இதற்கிடையே காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தூதரை பிரேசில் திரும்ப பெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles