சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் நாளை (19) சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயண திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ ஆகியவை இணைந்து, ஆக்ஸிம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 விண்கலம் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.
கடைசியாக 11ஆம் திகதி விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், திரவ ஒக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய திகதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் நாளை (19) சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பயணம் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
