Monday, February 2, 2026
HomeHealthஒற்றை தலைவலி ஏற்படுவதை தவிர்க்கும் வழிகள்...

ஒற்றை தலைவலி ஏற்படுவதை தவிர்க்கும் வழிகள்…

இன்றைய இறுக்கமான பணி சூழலில் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி ஏற்படுவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. பணி வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால் ஒற்றைத் தலைவலி எந்த சூழ்நிலைகளில் உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை புத்திசாலித்தனமாக தவிர்ப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு காணலாம் என்று மருத்துவர் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒற்றைத் தலைவலி என்ற சிக்கலை பொறுத்தவரை சில உணவு முறைகளாலும் கூட ஏற்படலாம். அதாவது ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் கூட அது ஏற்படலாம். மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) மற்றும் செயற்கை இனிப்புகள் ஆகியவையும் அதற்கான காரணங்களாக இருக்கலாம்.

அத்துடன் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய பிரகாசமான மின்விளக்குகள், சுற்றுப்புறத்தில் உள்ள சப்தம், மனம் இருக்கும் வாசனைகள் ஆகியவை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

அது மட்டுமல்லாமல் உடல் நிலையில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலம் அல்லது கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் ஒருவருடைய ஒழுங்கு முறையற்ற தூக்கம் முறைகள், அதிகப்படியான மன அழுத்தம், உணவு உண்ணும் நேரத்தை அல்லது உணவையே தவிர்ப்பது ஆகியவையும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு சிலர் உடற்பயிற்சிகள் மீது உள்ள அதீத ஆர்வம் காரணமாக கடுமையாக உடற்பயிற்சி செய்வது, அதிகப்படியான உடல் உழைப்பு, மன பதற்றம் ஆகியவையும் கூட ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம்.

பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம் என்று குறிப்பிட்ட மருத்துவ வல்லுனர்கள் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார்கள். அது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலும் கூட அது ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமையலாம். அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட, துரித உணவு வகைகளை தவிர்ப்பது அவசியம். தேவைப்பட்டால் மட்டும் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் அவசியமானது.

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு சீரான உறக்க முறைகளை ஒருவர் கடைபிடிப்பது அவசியம் ஆகும். இரவு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அன்றாட பணிகளை செய்வது என்ற ஒரு சீரான அட்டவணையை பின்பற்றுவதன் மூலமாகவும் ஒற்றைத் தலைவலியை வராமலேயே தடுக்க முடியும்.

ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை விட்டமின் பி-2 என்று சொல்லப்படும் ரிபோபிளேவின் ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தவிர்க்க உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதிகப்படியான உழைப்பு, மன அழுத்தம், இறுக்கம் ஆகியவற்றை தவிர்ப்பதன் மூலமாகவும் ஒற்றை தலைவலியை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிலும் அளவான போக்கை கடைபிடிப்பதன் மூலமாகவே உடலின் சமநிலையை பேணிக் காப்பதோடு மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என்று தான் மருத்துவ வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular