சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் விசேட மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை மறு அறிவித்தல் வரை ரத்து செய்து, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொது நிர்வாக சுற்றறிக்கை 14/2022, பொது நிறுவன சுற்றறிக்கை எண் PED 05/2022 மற்றும் அந்த சுற்றறிக்கைகளுடன் இணைக்கப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை ரத்து செய்து இந்த உத்தரவுகள் 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டன.
சுகாதார ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால், சுகாதார அமைச்சின் அத்தியாவசிய கடமைகளைப் பராமரிப்பது கடினமாகிவிட்டதாகவும், சுகாதார அமைச்சில் உள்ள அனைத்து வெற்றிடங்கள் மற்றும் பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இந்தச் சுற்றறிக்கையை, சுகாதார அமைச்சின் அனைத்து மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகங்கள், அனைத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், விசேட திட்டத் தலைவர்கள், மாகாண மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அடிப்படை மருத்துவமனைகளின் தலைவர்கள், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள கூட்டுத்தாபன தலைவர்கள் மற்றும் அமைச்சின் அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் வெளியிட்டுள்ளார்.
