Monday, February 2, 2026
HomeHealthவாயு தொல்லைக்கு மருந்தாகும் பெருஞ்சீரகம்

வாயு தொல்லைக்கு மருந்தாகும் பெருஞ்சீரகம்

ஓட்டல்களில் சாப்பாடோ, பிரியாணியோ சாப்பிட்டு முடித்ததும் பில் தொகை செலுத்தும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் வைக்கப்பட்டிருக்கும். அது இனிப்பு கலந்து வெள்ளை நிறத்திலோ அல்லது எதுவும் சேர்க்கப்படாமல் பச்சை நிறத்திலோ காட்சியளிக்கும். அதனை சிறிது எடுத்து மெல்லும் வழக்கத்தை பலரும் பின்பற்றுவார்கள். அவை என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும்

பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது. ரசாயன அடிப்படையிலான வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருட்களை போல் அல்லாமல், பெருஞ்சீரகம் சுவாசத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும்.

ஹார்மோன் சம நிலைக்கு உதவும்

பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள். குறிப்பாக மாதவிடாய் கோளாறுகள், வயிறு வீக்கம் மற்றும் மனக்குழப்பத்தை கையாளும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.

உடல் எடையை நிர்வகிக்கும்

பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைத்து காலப்போக்கில் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

அனெத்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளன. அவை செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும். குறிப்பாக அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலோ பெருஞ்சீரகம் மெல்வது நல்ல பலனை தரும்.

வீக்கம் மற்றும் வாயு தொல்லையை குறைக்கும்

வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். அதிலிருக்கும் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதன் மூலம் அந்த சங்கடமான நிலைமையை தவிர்க்க முடியும்.

எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

உணவு உட்கொண்ட பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு உகந்ததுதான் என்றாலும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகளை கொண்டிருந்தாலோ, மருந்து, மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பெருஞ்சீரகத்தை உணவுக்கு பிறகு மெல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

எது நல்லது?

பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகத்தை உட்கொள்வதே சிறந்தது. சர்க்கரை பாகு கலந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகமும் செரிமானத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவும் என்றாலும் அதிலிருக்கும் இனிப்பு கலோரிகளை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். ஊட்டச்சத்துக்களின் செறிவை நீர்த்து போகச்செய்யும். உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இனிப்பு பெருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular