7 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஜா- எல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான இளம் வர்த்தகர் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் இருந்து இந்தியாவுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இன்றைய தினம் காலை 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான இளம் வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான இளம் வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 07 கிலோ 070 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 7 கோடி ரூபாய் என மதிப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளம் வர்த்தகர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
