அமைதிப்படை காலத்தில் இலங்கையில் உயிரிழந்த இந்தியப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், இந்திய துணைத் தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்று திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்துக்கு இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்திய இராணுவம் இலங்கையில் அமைதி காக்கும் படையாக 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் செயல்பட்டது. இக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இந்தப் போரில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
