மட்டக்களப்பில் மதுபானம் வாங்க பணம் கொடுக்காத தாயை கொலை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் வாங்குவதற்கு பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவதினம் மாலை 6 மணியளவில், சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர் தாயைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளியுள்ளார்.
இதன்போது நிலைதடுமாறி அவரது தாய் கீழே விழுந்துள்ளார். தாயின் தலை தரையில் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து தப்பியோடிய இளைஞனை பொலிஸார் கைதுசெய்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
