
கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்திலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள ஆயர் இல்ல சிற்றாலய மூன்றிலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இறைமக்களென பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.
