இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட நபர்களை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்து தொடர்பாக, மலேசியாவுடனான தற்காப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஷிங்டன் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஜோகூர், Forest City-யில் உள்ள தொழில்நுட்பக் சமூக மையத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட இஸ்ரேலியர்கள் வசிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மலேசியாவில் இஸ்ரேலியர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவர் எனப் பிரதமர் அன்வார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முக்கிய உறுப்பினர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் குடிமக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மலேசிய இராணுவப் பயிற்சிக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துலக இராணுவக் கல்வி மற்றும் பயிற்சி நிதியைத் (IMET) இடைநிறுத்துவது உட்பட தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
15 நாட்களுக்குள் மலேசியா இந்தக் கொள்கையைத் திரும்பப் பெறாவிட்டால், மலேசியாவுக்கான இராணுவ நிதி உதவியை நிறுத்துமாறு அந்த அறிக்கையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
