ஐக்கிய நாடுகள் சபையின் காப்புரிமை, புத்தாக்கப் பிரிவின் தலைவராக இரண்டாவது முறையாக ஆறு ஆண்டு காலத்துக்கு சிங்கப்பூரின் டரன் ராங் நேற்று (21) நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக அறிவுசார் சொத்து அமைப்பின் பொதுச் சபையின் போது, பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளரான ராங்கை அதன் 194 உறுப்பு நாடுகள் மீண்டும் நியமித்தன.
1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பு, படைப்பாளிகள் மற்றும் தொழில்முனைவர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை எல்லைகளைத் தாண்டிப் பாதுகாக்க உதவுகிறது.
‘எனது முதல் பதவிக்காலத்தில், அறிவுசார் சொத்தை ஒரு தொழில்நுட்ப மற்றும் சட்டபூர்வமான விவகாரத்திலிருந்து, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை உந்துவதற்கு உதவும் வணிக, பொருளியல் மற்றும் நிதிச் சொத்தாக மாற்றுவதற்கும் மேலும் வேலைவாய்ப்புகள், முதலீடுகள், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஓர் ஊக்குவிப்பாக செயல்படுவதற்கும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றினேன்.
‘இரண்டாவது பதவிக்காலத்திலும் இந்தப் பணி தொடரும், இதன் மூலம் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் அறிவுசார் அமைப்புகள் பயனர்களுக்கு திறமையாகவும் பயனுள்ள வகையிலும் சேவை செய்யும்.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் வேகமாக மாறிவரும் உலகில், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகளாவிய அறிவுசார் சொத்துகளின் தரநிலைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் அறிவுசார் சொத்து தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படும், அத்துடன் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும். மேலும், அறிவுசார் சொத்து விளிம்பிலிருந்து மையத்திற்கு நகரும்.’ – என்று டரன் ராங் தெரிவித்தார்.
முன்பு சிங்கப்பூரின் தேசிய காப்புரிமைப் பிரிவின் தலைவராக இருந்த டாங், ஒக்ரோபர் 1ஆம் திகதியன்று உலக அறிவுசார் சொத்து அமைப்பின் தலைவராகத் தமது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்குவார்.
