பீஹார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் அரச மருத்துவமனை உள்ளது. அங்கு வேலை பார்க்கும் பாதுகாப்பு பணியாளர், நோயாளி ஒருவருக்கு தையல் போட்டு பண்டேஜ் போடும் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் சஞ்சய் தத், தனது தந்தையின் ஆசைக்காக மருத்துவர் போல நடித்திருந்தார். அது சினிமா ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் பாதுகாப்பு பணியாளர் செய்த வேலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பகாகா மருத்துவமனைக்கு அருகே நடந்த டெம்போ வான் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து அம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
அப்போது, மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் நோயாளியின் காயத்துக்கு தையலிட்டு பண்டேஜ் வைத்துக்கட்டியுள்ளார். இதனை அந்த அம்புலன்ஸ் சாரதியும் காயமடைந்த ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, பகாகா மருத்துவமனை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் குமார் திவாரி கூறும்போது, ‘இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், தாதியரர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லை. சத்திரசிகிச்சை கூட உதவியாளர்கள், கட்டுப்போடும் ஊழியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக வெற்றிடமாக உள்ளன.
இருக்கும் ஊழியர்களை வைத்து மருத்துவமனையை நடத்தி வருகிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்கள் வந்தபோது ஒருவருக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்தது. இதையடுத்து மருத்துவர் ஒருவரின் மேற்பார்வையில்தான் பாதுகாப்பு பணியாளர் தையல் போட்டார்’ – என்றார்.
