தனது மகனின் செயல்பாடுகளால் கோபமடைந்த தந்தை ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை பெற்றோர் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பர் முச்சக்கரவண்டி சாரதியாகவுள்ளார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் கல்லூரியில் சேரும்போது, தனக்கு புதிய மோட்டார் சைக்கிள் வேண்டும் என தனது தந்தையை நச்சரித்துள்ளார். மகன் ஆசைப்படுகிறானே என சந்திரசேகரும் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான விலையில், மாதத் தவணையில் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு மகனின் போக்கே மாறிவிட்டது. அடிக்கடி நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வெகு தூரம் செல்வது, போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுவது, அதிக வேகமாக செல்வது என மகன் செயல்பட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராத ரசீது அடிக்கடி தந்தையின் செல்போனுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் பைக்கில் மகன் வேகமாக சென்றதால் ஒரு விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவத்துக்காக 1 லட்சம் ரூபா வரை சந்திரசேகர் செலவு செய்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளைத் திருத்தவும் 20 ஆயிரம் ரூபா செலவிட்டுள்ளார்.
மகன் குணமடைந்த பிறகும் அவரது போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாததால் சந்திரசேகர் ஆத்திரமடைந்தார். இதனால் நேற்று அவர் தனது மகனின் மோட்டார் சைக்கிளை ஒரு மைதானத்தில் வைத்து பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
