மலேசியாவின் பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது.
ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்ற 30 கிலோ மீட்டர் மலைப்பாதை ஓட்டப்பந்தயத்தில் அவர் கலந்து கொண்டார்.
காலை 6:30 மணிக்கு ஓடத் தொடங்கிய அவர், மாலை 4:00 மணியளவில் இலக்கை நெருங்கும் போது திடீரென மயங்கி விழுந்தார் என பினாங்கு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, பினாங்கு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.
வெப்பவாதத்தால் ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பு மற்றும் தசைச் சிதைவு ஆகியவை மரணத்திற்கு காரணம் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளியில் செல்லும் போது தளர்வான ஆடைகளை அணியவும், அடிக்கடி தண்ணீர் பருகவும், தலைச்சுற்றல் அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிழலான இடத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
