செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் எலும்புக்கூட்டுடன் மேலுமொரு என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
அதன்போது நேற்று 5 எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் எலும்புக்கூட்டு தொகுதி உட்பட 2 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில், 255 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 249 மனித என்புக்கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண்ணுக்குள் இருந்து எரிந்த நிலையில் சில எலும்புக்கூட்டு, நாணயக் குற்றிகளும் சான்று பொருள்களாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூக்குத்தி போன்ற உடைந்த நிலையில், சிறிய தங்க ஆபாரணம் ஒன்றும், காப்பு போன்ற ஆபரணம் ஒன்றும், மரப்பெட்டி ஒன்றின் சிதைவுகள், ஆணிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் எலும்புக்கூட்டு தொகுதி நேரடியாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கமுடியாத நிலைமை காணப்பட்டமையால், அதனை பன்டேஜ் துணிகளால் சுற்றி பக்குவப்படுத்தி மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
