வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதுங்கியிருந்து தாக்குதலில் குறைந்தது 14 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சனிக்கிழமை இரவு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை பயங்கரவாதிகள் பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் மோதச் செய்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் சோதனைச் சாவடி கட்டடம் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
முதற்கட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உதவிக்காக விரைந்த ஏனைய பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது பயங்கரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தினர் எள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தற்போது வரை இடிபாடுகளுக்குள் இருந்து 14 அதிகாரிகளின் உடல்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன. மூன்று அதிகாரிகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,’ என பொலிஸ் அதிகாரி சஜ்ஜாத் கான் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமிட்டத் தாக்குதலுக்கு ‘இத்திஹாத்-உல்-முஜாஹிதீன்’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
