சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு (2025) முதல் எழுப்பப்பட்ட பல சமூக முன்னெடுப்புகள் குறித்து இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவிட்டதைப் பொதுமக்கள் அறிந்திருப்பார்கள்.
முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலர் அவர்களின் தொகுதியில் வாழும் குடிமக்களுடன் தொடர்பில் இருக்கச் சமூக ஊடகங்களையே அதிகம் நாடுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமர்ந்துள்ள 25 உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான பதிவுகளைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களில் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் பாட்டாளிக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் அடங்குவர்.
இளைய குடியிருப்பாளர்களுக்குச் சமூக ஊடகங்களே சிறந்த தொடர்புக் கருவியாக இருப்பது அதற்கான முக்கியக் காரணமாகும்.
“குடியிருப்புப் பேட்டைகளில் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்புகின்ற விவரங்களையும் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகம் சிறந்த தளமாக அமைகிறது,” என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் முதன்முறை உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் அரசியல் தலைவர்கள் சமூக ஊடகத்தை இயல்பாகவே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் அவசியத்தை நன்குணர்ந்து அரசாங்கக் கொள்கைகளைக் குடியிருப்பாளர்களிடம் விரைவாக, எளிதாகக் கொண்டுசேர்க்க அதனை அத்தியாவசிமான ஒன்றாகக் கருதிச் செயலாற்றுகின்றனர்.
