சிறீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில சந்திரசேன அண்மையில் மர்மமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இடத்திலிருந்த சி.சி.ரீ.வி. கமெராக்கள் இயங்குநிலையிலிருந்தபோதும் அவற்றில் எந்தக் காட்சிகளும் பதிவாகவில்லை.
இன்று வியாழக்கிழமை இந்த மரணம் தொடர்பான விசாரணை மற்றும் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன கோட்டை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போதே குற்றத் தடுப்பு பிரிவு மேற்கண்ட தகவலை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. இன்றைய தினம், ஆறு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.
முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே உயிரிழந்தார். அந்த இல்லத்தில் சி.சி.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டு, அவை இயங்கு நிலையில் இருந்த போதிலும் நீண்டகாலமாக அதில் காட்சிகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிவானுக்குத் தெரிவித்தனர்.
இதனால் மரணம் நிகழ்ந்த இடத்தின் காட்சிகள் எவையும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை. எனினும், உயிரிழந்தவர் தங்கியிருந்த இல்லத்துக்குச் செல்லும் மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்ட அயல் வீடுகளின் சி.சி.ரீ.வி. பதிவுகள் அனைத்தும் பொலிஸாரால் பெறப்பட்டுள்ன என்றும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
கடந்த மே 12 ஆம் திகதி, நீதிமன்ற அனுமதியுடன் உயிரிழந்தவருக்கு சொந்தமான மற்றுமொரு இல்லத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதன்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
