சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 60 இலங்கை குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது சுமார் 30 பேர் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு தப்பிச் சென்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
இந்த குற்றவாளிகள் எந்த நாட்டுக்குத் தப்பியோடி இருந்தாலும், அவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்துவதற்குத் தேவையான அனைத்து சர்வதேச சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் இந்த இலங்கை குற்றவாளிகளின் பட்டியலில் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிதி மோசடியாளர்கள், தப்பியோடிய திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் போன்ற பிரிவினர் அடங்குகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் தாங்கள் சர்வதேச பொலிஸாரால் அல்லது அந்தந்த நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்தமையாலேயே, இக்குற்றவாளிகள் தங்களது தற்போதைய தங்குமிடங்களை விட்டு அவசரமாகத் தப்பியோடியுள்ளனர் எனக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகிக்கின்றது.
இருப்பினும், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 42 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
