பியர் உற்பத்திக்காக அரிசி, சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பேராணை மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மதுவரி ஆணையாளர் நாயகம், மதுவரித் திணைக்கள அதிகாரிகள்இ இலங்கை தரக்கட்டளை நிறுவனம், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், பியர் என்பது முளைகட்டிய தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த மதுபானம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பியர் உற்பத்திக்காக அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இது மதுவரி சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரச நிதியின் கீழ் மிகப்பெரும் பொது மானியங்களுடன் உற்பத்தி செய்யப்படும் அரிசி, பியர் உற்பத்தி போன்ற வணிகத் தொழில்துறைகளுக்குத் திருப்பி விடப்படுகிறது. இது தேசிய பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு அடைவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்த மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் அனுமதி வழங்குவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றைக் கேட்டுள்ளனர்.
