அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை படுகொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை சுட்டு கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தி டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் இப்ராகிம் அஜிஜி கூறும்போது, ஈரானின் இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரின் பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் வரைவு மசோதா ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.
இதன்படி ட்ரம்ப்பை படுகொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அந்த மசோதா தெரிவிக்கின்றது. ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க கடற்படை தளபதி பிராட் கூப்பர் ஆகிய 3 பேரும் கொமெய்னி படுகொலைக்கு முக்கிய பின்னணியாக இருந்தவர்கள். அந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள்.
இதனால், இதற்கான சரியான பதிலடியை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும் என அஜிஜி கூறியுள்ளார். இவர்கள் 3 பேரையும் நரகத்திற்கு அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு தொகையை கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று, ஈரான் பாராளுமன்ற தேச பாதுகாப்பு குழுவின் துணை தலைவரான மஹ்மூத் நபாவியன் கூறும்போது, ஈரான் அல்லது அதன் மைய தலைமைக்கு எதிரான எந்தவொரு நேரடி இராணுவ தாக்குதலுக்கும் விரைவான பதிலடி கொடுக்கப்படும்.
அது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் மட்டும் நில்லாமல், அவர்களுடன் கூட்டணியாக சேர்ந்து செயல்படும் அரபு நாடுகளின் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வகையில் கூறினார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
