இஸ்ரேல் படைகளால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த மனித மருத்துவரும் உரிமைகள் செயல்பாட்டாளளருமான சமீரா மெஹ்பூப்தீன் பாதுகாப்பாக நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட சமீரா மெஹ்பூப்தீன் அங்கிருந்து துருக்கியின் இஸ்தான்புல் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டார் என்று இஸ்ரேலை தளமாகக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவான ‘அடாலா’ தெரிவித்துள்ளது.
அவர் விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அவரை சந்தித்துப் பேசினர் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள காஸா நகரத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் பலர் மனிதாபிமான பொருட்களை கொண்டுசென்றனர். அவ்வாறு சென்ற படகுகள் பல இஸ்ரேல் படைகளால் தடுத்துநிறுத்தப்பட்டன. அதிலிருந்த பல நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தற்போது பாதுகாப்பாக நாடு கடத்தப்படுகின்றனர். இவ்வாறு நாடு கடத்தப்படுபவர்களில் இலங்கையை சேர்ந்த சமீரா மெஹ்பூப்தீனும் ஒருவர். இவர் இந்த ஒற்றுமை பயணத்தில் இணைவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
