சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலாவுக்காக மாணவர்களை அழைத்துவந்த கொங்கொங் பாடசாலை அதிபர் ஒருவர், இங்குள்ள பாதுகாவலர்களை மோசமாகத் திட்டியதால் அவர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கொங்கொங்கின் டுவென் முன் மாவட்டத்தில் உள்ள சன் வுய் வர்த்தகச் சமூகப் பாடசாலை அதிபர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என அப்பள்ளியின் நிர்வாகி எட்மண்ட் வோங் சுன்-செக் தெரிவித்தார்.
அவரது செயல், பொதுமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று வோங் சுட்டிக்காட்டினார்.
சவுத் சைனா மார்னிங் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், இம்மாதம் (மே) 26ஆம் திகதி நடந்த சம்பவத்தில் அவருடன் கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் விவரங்களைக் கேட்ட பிறகு அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளியின் துணை முதல்வர் தற்காலிக முதல்வராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொங்கொங் கல்வி அலுவலகம், பள்ளி அதிபர் விவகாரத்தை விசாரித்து வருவதாகக் கூறியிருந்தது.
சிங்கப்பூரில் அந்த அதிபர் பாதுகாவலர்களைத் திட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி பலரை அதிர்ச்சியடைய வைத்தது.
மே 23ஆம் திகதி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் பேருந்தின் கதவோரமாக நின்றிருந்த அவர், பாதுகாவலர் சீருடை அணிந்திருந்த பெண்கள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது.
பேருந்தைப் பின்னால் நகர்த்துமாறு பெண் அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. அதற்கு அவர் ‘வாயை மூடு’ என்று அவர்களைச் சரமாரியாகத் திட்டுகிறார்.
அவருக்குப் பின்னால் இருந்த பெண் அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தபோது அவரையும் அந்த அதிபர் சாடுகிறார்.
கொங்கொங்கிலிருந்து 35 மாணவர்களும் ஆசிரியர்கள் சிலரும் மே 20 முதல் 24 வரை கல்விச் சுற்றுலாவுக்காகச் சிங்கப்பூர் வந்தபோது அந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தக் குழுவில் பாடசாலை அதிபரும் இருந்தார்.
இது குறித்துக் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
