அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்து வரும் ஈரான் போருக்கு எதிராக காங்கிரஸ் 215-208 என்ற வாக்கு வித்தியாசத்தில் போர் அதிகாரத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானம், அமெரிக்கப் படைகளை போரிலிருந்து திரும்பப் பெறுமாறு அல்லது போருக்கு காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறது. நான்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானத்தின் சட்டபூர்வ பலம் குறித்து சந்தேகங்கள் இருந்தாலும் வெள்ளை மாளிகைக்கு எதிரான அரசியல் அழுத்தம் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது. போரால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. மக்களிடையேயும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
குடியரசுக் கட்சி உறுப்பினரான ரொம் பாரட் ‘போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே சொந்தமானது. நான் சரி என்று நம்புவதைப் பின்பற்றியே வாக்களித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விவகார குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கிரேகோரி மீக்ஸ், ‘இது ட்ரம்பின் சட்டவிரோதமும் செலவுமிக்கதுமான ஈரான் போருக்கு எதிரான இரு கட்சிகளின் கடும் கண்டனமாகும்’ என்று கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது. பின்னர் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டையும் மீறி அண்மைக் காலங்களில் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், ‘போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் உடன்பாடு எட்டப்படலாம்’ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
