ஜொகூர் மாநிலம் முவார் பகுதியில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் 57.15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலை கடல்சார் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
பொலிஸ் மரைன் படையின் இரண்டாம் பிராந்தியப் பிரிவும், முவார் மாவட்ட பொலிஸ் தலைமையக போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவும் இணைந்து நேற்று அதிகாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த வெற்றி கிடைத்தது.
பாரிட் அமாட் லாவுட் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், அதிகாலை 12.30 மணியளவில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகு மற்றும் சில வாகனங்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், சில நபர்கள் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளைப் படகில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவை அண்டை நாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது.
உடனடியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 63 வயதுடைய ஆண் மற்றும் 43 வயதுடைய பெண் ஆகிய இரு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதைப்பொருள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 57.15 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
