யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் போது இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சிறுவர்களுடையவை என்று தெரிவிக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 18ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது புதிதாக 6 எலும்புக்கூடு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து இரண்டு சிறுவர்களின் எச்சங்கள் உட்பட மொத்தம் 8 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் மொத்தமாக 302 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 298 முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்களுக்குச் சொந்தமானதாக கருதப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
