கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். நீதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்து, இன்று (ஜூன் 12) தமிழகம் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடகத்தின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முதல்வர் விஜய் வீதி வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தார். முதல்வர் விஜய்க்கு கர்நாடக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் யுடி காதர் வரவேற்பு அளித்தார்.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கோயில் அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாள் ஒன்றை காணிக்கை அளித்தார்.
முதல்வர் விஜய்யின் கொல்லூர் வருகைக்கும் தமிழ்நாடு அரசியலுக்கு நீண்ட நெடிய வரலாறும் இருப்பதாகக் கூறப்படுகிறது. திரைத்துறையிலிருந்து முதல்வராக ஜொலித்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தனித்தனியே வெவ்வேறு காலகட்டங்களில் முதல்வரான பின்னர் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
அவர்களின் வழியில், முதல்வர் விஜய்யும் இன்று கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்தார். இசைஞானி இளையராஜாவும் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, மூகாம்பிகை அம்மனுக்கு ஒரு 2.5 அடி நீள தங்க வாளைக் காணிக்கையாகச் சமர்ப்பிதிருக்கிறார். இன்றும் சிறப்புப் பூஜைகள் மற்றும் திருவிழாக்களின் போது எம்.ஜி.ஆர். கொடுத்த தங்க வாள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
