மலேசியாவின் பகாங் குவாந்தானில் உள்ள செராட்டிங் பாலம் அருகே, குவாந்தான்-கெமாமன் வீதியில் 24 தொன் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற ராங்கர் லொறி கவிழ்ந்ததை அடுத்து, அபாயப் பொருள் குழு அனுப்பப்பட்டு, நீர் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
ஜோகூரின் பாசீர் கூடாங்கிலிருந்து தெரெங்கானுவின் கெமாமனுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ராங்கர் சறுக்கி கவிழ்ந்ததை அடுத்து, காலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சலாவுதீன் இஸா கூறினார்.
இதனால் ராங்கரின் மேல் மூடியில் கசிவு ஏற்பட்டு, சுமார் 1,000 லீற்றர் அமிலம் அருகிலுள்ள சதுப்புநிலக் காட்டில் பாய்ந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
இரசாயனம் பிரதான சாலையில் பரவாமல் தடுக்க நீர் தடுப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், பணியாளர்கள் அமிலத்தை ஒரு ஃபைபர் வலுவூட்டப்பட்ட தொட்டிக்கு மாற்றும் பணியைத் தொடங்கினர்.
ஓட்டுநருக்குக் காயங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கெமாமன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று சலாவுதீன் கூறினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் துறைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
