அமெரிக்காவில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தானது நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டி.சி. நகருக்கு கிழக்கே 20 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தின் போவி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் இஸ்ரேலியர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேரிலாந்து மாநில காவல்துறையின் தகவலின்படி, விபத்துக்குள்ளான விமானம் மான்ட்கோமெரி கவுண்டியில் உள்ள ஒரு விமானப் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமானதாகும்.
விபத்து நேரத்தில் அது பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
குறித்த விமானம், நியூ ஜெர்சி மாநிலத்தின் ஓஷன் சிட்டியில் இருந்து புறப்பட்டு மேரிலாந்தின் மான்ட்கோமெரி கவுண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த போது விமானத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே இருந்தனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
