யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இவ்விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் குழாம் முழுமையடையாத காரணத்தினால் இதன் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அர்ச்சுனா இராமநாதன் இன்னும் அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவையிலிருந்து முறையாக இராஜிநாமா செய்யாமல் வேட்புமனுக்களைச் சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என்று வாதிடும் மனுதாரர், அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாகப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
