பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கு சாலமன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது.
அப்போது, பசுபிக் பிராந்தியத்தில் சீனா நடத்திய ஏவுகணைச் சோதனை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் பதிலளிக்கையில்,
“இந்தச் சோதனை பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் சீனாவின் ஒரு தூண்டல் நடவடிக்கை ஆகும்.
இதுகுறித்த எங்களது கவலைகளை ஆஸ்திரேலியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
இத்தகைய சோதனைக்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பாவது அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல், சீனா தங்களது “நல்ல நண்பன்” என்று குறிப்பிட்ட போதிலும், தற்போதைய செயலை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
“ஆனால், ஒரு நண்பன் செய்யும் செயல் இதுவல்ல” என்று அவர் கூறினார்.
“பசுபிக் தீவுப் பிராந்தியத்தில் யாரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சோதித்துப் பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை; இதுவே எங்களது இறுதியான நிலைப்பாடு. எங்களுடன் நண்பராக இருங்கள், ஆனால் எங்களை அச்சுறுத்த வேண்டாம்,” என்று சீனாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறுதியாகப் பேசிய ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானிஸ், “இந்த உலகிற்கு அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமே தவிர, நிச்சயமாக அதிகரிக்கக் கூடாது,” என்று வலியுறுத்தினார்.
