அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்கவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்கமுவே நாலக தேரர், வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், முதன்மை மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்த பின்னரே இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த வழக்கு பொதுமக்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதால் தங்களது கருத்துகளை முன்வைக்க அனுமதி வழங்குமாறு இடைக்கால மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
எனினும், மனுதாரர் சார்பிலான வாதங்கள் நிறைவடைந்த பின்னரே இடைக்கால மனுக்கள் குறித்து பரிசீலிக்க முடியும் என தெரிவித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் ஜூலை 17ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்டது.
