நடிகை ஸ்வாசிகா நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸைப் பார்க்க ஒரு லட்சம் கேட்கப்பட்டதாகக் கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். கடைசியாக கருப்பு, நூறு சாமி திரைப்படத்திலும் நடித்து மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஜேஎஃப்டபிள்யூ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது:
திரைத்துறையில் இயக்குநர்களைப் பார்க்கவேண்டுமானால் அவர்களது மேலாளர்கள் பெரும் தொகையைக் கேட்கிறார்கள். அப்படித்தான் ஏ.ஆர். முருகதாஸ் சாரை சந்திக்கவே அவரது மேலாளர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். இதற்காக எனது அம்மா தனது நகைகளை விற்கவும் தயாராக இருந்தார். பின்னர்தான் அது மோசடி என்று தெரியவந்தது.
சில மேலாளர்கள் என்னிடம் பணம் அல்லது வேறு விதமான விருப்பங்களை செய்துகொடுக்கும்படி கேட்கிறார்கள். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது அவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கருப்பு திரைப்படத்தில் பிரியாணி கேட்கும் எனது கதாபாத்திரம் போன்றுதான் சினிமா துறையும் இருக்கிறது என்றார்.
சமீபத்தில் வெளியான நூறு சாமி திரைப்படத்தினை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் புகழ்ந்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
