யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் மேற்படி அதிகாரி காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
போதைப்பொருள் வழக்குத் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் வழக்கு விசாரணை, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் அந்தக் கைதியின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயம், அந்த விளக்கமறியல் கைதி சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது திடீரெனத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
