கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக் குளக்கரையை அண்மித்த பகுதியில் இன்று எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் தீயிட்டு எரிக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் சான்றுகளை சேகரித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
