மகாராஷ்டிரத்தில் உண்டு – உறைவிட பள்ளியில் பாம்பு கடித்து பழங்குடியினச் சிறுமிகள் 3 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினருக்கான உண்டு – உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பள்ளி விடுதியின் தரையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிகளை விஷப்பாம்பு கடித்தது.
இதில் 8, 12 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுமிகள் பலியாகினர். 11 முதல் 14 வயதுக்குட்பட்ட மற்ற மூன்று சிறுமிகள் பாம்பு கடிக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
இதனிடையே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
