ஈரான் மீதான போரில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் முக்கிய நகரங்களின் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் வெடித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ததால், மீண்டும் போர் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
இந்தப் போரின் முக்கிய இலக்கு ஈரான் அணுசக்தித் திட்டத்தை கைவிடுவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஈரான் மீதான போரின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் எனவும், இரண்டாவது இலக்கு ஈரான் அணு ஆயுதங்கள் பெறாததை உறுதி செய்து எனவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நேற்று கூறியுள்ளமை பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“போர் தொடங்கிய ஆரம்ப நாள்களில் இருந்த உச்ச விலையை விடவும் இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பதை நான் அறிவேன்.
நாடு முழுவதுமுள்ள அமெரிக்கர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான இலக்காகும்.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறாததை உறுதி செய்வது எங்களின் இரண்டாவது இலக்காகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க தாக்குதல்களுக்கு எதிரான சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியுள்ளன.
தனால், எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி அதன் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, இந்தப் போரில் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க அரசு மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
