LPT 2 நெடுஞ்சாலையின் 357-வது கிலோமீட்டர் பகுதியில் கோலா திரங்கானுவில் இருந்து குவாந்தான் செல்லும் பாதையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தீயில் உடல் கருகி மரணமானார்.
அம்மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய விபத்து குறித்து காலை சுமார் 5.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக Dungun மாவட்டக் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குவாந்தான் நோக்கி ஒரே திசையில் அவ்விரு வாகனங்களும் சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
37 வயதுடை ஒருவர் செலுத்திய லொறி, கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்று வீதியின் ஓரத்தில் மோதியது. திடீரென்று பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி தீப்பற்றியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
விபத்தில் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் தீயில் முற்றாக எரிந்தது.
லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததோடு இடது புறப் பின் பகுதியிலும் தீப்பிடித்தது. இருப்பினும் லொறி ஓட்டுநருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
