யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 108ஆவது நாள் பணிகள் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாள்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று 54ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன்போது 10 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 9 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 572 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குவியலாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று மூன்று சோதனைக்குழிகள் அகழப்பட்டபோதும், அவற்றில் இருந்து எந்தவொரு என்புக்கூடும் அடையாளம் காணப்படவில்லை.
இதுவரை புதைகுழிகளை அண்மித்த பகுதிகளில் 14 சோதனைக்குழிகள் அகழப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 5 சோதனைக்குழிகளில் இருந்து மொத்தம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
