பாரிஸில் சிக்கிய 58 அகதிகள் – பிரித்தானியா செல்லும் வழியில் மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ‘இம்பாஸ் மார்ட்டோ’ (Impasse Marteau) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சாரதி எவருமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்திக்குள் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் அகதித் தஞ்சம் கோரியதற்கான ஆவணங்களை வைத்திருந்தவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், சட்டபூர்வ வதிவிட ஆவணங்கள் எதுவும் இல்லாத 26 வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு, நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அகதிகள் மீட்கப்பட்ட பாரவூர்தி சென்-எ-மார்ன் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் கதவுகள் திறந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பாரவூர்தியும் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

அந்த வாகனம் வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, மீட்கப்பட்ட அகதிகள் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அகதிகளை யார் ஏற்றிச் சென்றனர், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles